பிரெஞ்சு பகிரங்க டெனிஸ் போட்டியின் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதியாட்டத்தில் நடப்புச் சாம்பியன் ரபேல் நடால்(தரவரிசையில் 2), சுவிற்ஸர்லாந்தின் ரோஜர் பெடரரை 6:1, 6:3, 6:0 என்ற நேர் செற்கணக்குகளில் வீழ்த்தி பட்டம் வென்றார்.
களிமண் களநாயகன் நடால் பிரெஞ்சு பகிரங்க டெனிஸ் போட்டியில் வீழ்த்த முடியாத வீரராக வலம் வருகிறார். இதுவரை இங்கு விளையாடியுள்ள 28 போட்டிகளிலும் வென்று சாதித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக சம்பியன் பட்டத்தை தன்வசம் வைத்திருந்த அவர், இன்று நடந்த போட்டியில் பெடரரை வீழ்த்தியதன்மூலம் தொடர்ந்து நான்காவது முறையாக சம்பியன் கிண்ணத்தை வென்றார்.
இதன்மூலம் பிரெஞ்சு பகிரங்க டெனிஸ் போட்டியில் தொடர்ந்து நான்கு பட்டங்கள் வென்ற சுவீடனின் ஜோனஸ் போர்க்மேன் சாதனையை நடால் சமன் செய்தார்.
தனது 11ஆவது பிரெஞ்சு பகிரங்க டெனிஸ் தொடரில் விளையாடிய பெடரர் ஒரு முறை கூட கிண்ணத்தை வென்றதில்லை. இவர் இதுவரை நடால் உடன் 17 போட்டிகளில் மோதியுள்ளார். இதில் நடால் 11இல் வெற்றி கண்டுள்ளார். களிமண் களத்தில் இவர்கள் விளையாடிய10 போட்டிகளில் நடால் 9இல் வெற்றி கொடி நாட்டியுள்ளார்.
கடந்த மூன்று தொடர்களில் பெடரர் ஒரு முறை அரையிறுதிக்கும் (2005), இரண்டு முறை இறுதியாட்டத்துக்கும் (2006, 2007) முன்னேறியுள்ளார். இந்த மூன்று போட்டிகளிலும் நடாலிடம் தோல்வியடைந்துள்ளார். ஆனால், இவர் இம்முறை கிண்ணத்தை வென்று சாதிப்பார் என அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். நடாலின் ஆக்ரோஷ ஆட்டத்தால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெடரால் நிறைவேற்றமுடியாமல் போனது.
Filed under: Uncategorized


